சென்னை: மங்களூரில் ஆட்ேடாவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகள் சதித்திட்டம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தேக நபர்களை தீவிரமாக கண்காணித்து பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் சென்ற ஆட்டோ ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த பயணி ஒருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து கர்நாடக மாநில போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அதில். ஆட்டோவில் வெடித்து சிதறியது குக்கர் வெடிகுண்டு என தெரியவந்தது. அதைதொடர்ந்து கர்நாடக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் மங்களூரு பகுதியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாதிகளின் சதி என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கர்நாடக மாநில டிஜிபி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெடி குண்டு விபத்து தொடர்பாக ஒன்றிய அரசின் விசாரணை ஆணையங்களுடன் இணைந்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் கர்நாடக மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மற்றும் அம்மாநில எல்லைகளில் தற்போது உஷார் படுத்தப்பட்டுள்ளது. மங்களூரில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு எனவும், அதேநேரம் தீவிரவாதிகளின் சதி எனவும் விபத்து நடந்த பகுதியில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் படி உறுதியாகியுள்ளது. இதனால் ஒன்றிய உளவுத்துறை இதுபோல் நாடுமுழுவதும் தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டு வெடிப்பு நடத்துவதற்கான திட்டத்தை வகுத்து செயல்பட்டு உள்ளனர். இதனால் அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி தமிழக எல்லைகள், கடலோர பகுதிகள், சுற்றுலா தளங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், கோயில்கள், சர்ச் மற்றும் மசூதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், சந்தேக நபர்களை தீவிரமாக கண்காணித்து பிடித்து விசாரணை நடத்தவும், வாகன சோதனைகள் நடத்தவும் உத்தரவிட்டார்.
டிஜிபியின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மண்டல ஐஜிக்கள் தலைமையில் டிஐஜிக்கள் மேற்பார்வையில் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், மாநகர கமிஷனர்கள் தங்கள் காவல் எல்லையில் பாதுகாப்பு பணிகளை ேமற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த மாதம் 23ம் தேதி கோட்டைமேட்டில் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின்(25) உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போது, அது தீவிரவாத தாக்குதல் சம்பவம் என தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், உயிரிழந்த ஜமேஷா முபின் நண்பர்களான அப்சர்கான், முகமது அசாருதீன் உட்பட 6 பேரை அதிரடியாக கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மங்களூரில் ஆட்ேடாவில் வெடித்த குண்டு தீவிரவாதிகள் சதி என தெரியவந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு நேற்று மாலை முதல் மாநில எல்லையான கேரளா, கர்நாடக, ஆந்திரா எல்லைகளில் ஏற்கனவே இருக்கும் சோதனை சாவடிகளுடன் கூடுதலாக 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை விடிய விடிய தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு விடுவிக்கினறனர். அதேபோல், மாவட்ட எல்லைகளில் அந்தந்த மாவட்ட போலீசார் சோதனை சாவடிகள் அமைத்தும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிககளின் நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழக சிறைகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி மாநகர கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர், தாம்பரம் மாநகர கமிஷனர் அமல் ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு பணி ேமற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகள், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா தளங்கள், கோயில்கள், தேவாலயங்கள், சர்ச்சுகள் என அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.