×

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை + வங்கி = வளம்!

நன்றி குங்குமம் தோழி

புதுச்சேரியின் பகுதியான கரிக்கலாம்பாக்கம் வங்கிக் கிளையில் நடந்த ஒரு சம்பவம். அன்று காலை வங்கி இயங்கும் நேரத்தில் புதுச்சேரி அருகே உள்ள ஏம்பலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வங்கியில் சேமிப்புக் கணக்கினைத் துவக்க எண்ணி வங்கிக்கு வந்திருந்தார். இன்னென்ன ஆவணங்கள் தேவை என்று சொன்னவுடன் ‘இதையெல்லாம் எதுக்கு கேட்கறீங்க, நான்தான் நேர்லயே வந்திருக்கேனே, என் பெயரைச் சொல்லி இந்த ஊர்ல யார வேணுமானாலும் கேட்டுப்பாருங்க, அவங்க என்னைப் பற்றி சொல்லுவாங்க.. என் பெயர்ல ஒரு கணக்கு வேணும், அவ்வளவுதானே... இதுக்கு போயி வீடு, வாசல்ன்னு எல்லா அட்டையையும் கேட்கறீங்க..’ என்று புலம்பினார்.  

வங்கிகளின் நடைமுறைகள், வங்கியாளர்கள் கணக்கைத் துவக்கக் கேட்கும் கேள்விகள் இவற்றையெல்லாம் பின்பற்றுவதற்கு எனக்கு வங்கிக்  கணக்கே வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் சொல்வதை கேட்ட போது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நடித்து 1949 ஆம் ஆண்டு வெளியான ‘நல்லதம்பி’ திரைப்படத்தில் வரும் ‘விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி’ என்று தொடங்கும் பாடலின் ‘பட்டன தட்டிவிட்டா, ரெண்டு தட்டுல இட்லியும் காப்பியும் நம்ம பக்கத்துல வந்திடனும்’ என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் வங்கியில் கணக்குத் துவக்குபவரின் கணக்கைப் பாதுகாக்க, சட்டம் சொல்வதன்படி நடக்க வேண்டும் என்பது தான் விதிமுறை.

காரணம் கணக்கைத் துவங்குபவரின் பெயரில் அதே பெயரில் போலிக் கணக்கினை துவக்குவதைத் தடுக்க இந்த அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை வங்கி கேட்கின்றது என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதுவுமே முதலில் சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால் கவியரசு கண்ணதாசனின் வரிகளில் சொல்லவேண்டுமெனில் ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில், ஆழக்கடலும் சோலையாகும், ஆசையிருந்தால் நீந்திவா’ அவ்வளவுதான். அந்த பெண்மணி கேட்டதற்கு இந்த ‘அவ்வளவுதான்’ பதில்.

வருடாந்திர வைப்புநிதித் திட்டம் சேமிப்புத் திட்டங்களை பட்டியலிடும் சில வங்கிகள் வருடாந்திர வைப்பு நிதி என்றொரு திட்டத்தை வழங்குவதைக் கேள்விப்படுகின்றோம். இந்த திட்டத்திற்கும் நிலைவைப்புத் திட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்று தெரிந்து கொள்வோம். நிலைவைப்பு (Fixed  Deposit ) என்பது குறிப்பிட்ட ஒரு தொகையை ஒரே நாளில் வங்கியில் குறிப்பிட்ட காலத்திற்குச் செலுத்தி இடையில் பணம் எடுக்காமல் அந்த டெபாசிட் முதிர்வடைந்த, அதாவது முதிர்வு நாளில் (Maturity Date) அதற்குண்டான வட்டியுடன் சேர்த்துத் திரும்பப் பெறுவதாகும்.

ஆனால் வருடாந்திர வைப்பு நிதி (Annuity Deposit) என்பது டெபாசிட் செய்யும் மொத்த தொகையை ஒரேநாளில் செலுத்தி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் தவணையில் பென்ஷன் போல திரும்பப் பெறுவதேயாகும். உதாரணமாக நாம் முதிர்வு காலம் மூன்று வருடங்கள் என்று நிர்ணயித்து வருடாந்திர வைப்பு நிதி திட்டத்தின்படி ஒரு முழு தொகையைச் செலுத்தினோம் என்றால் ஒவ்வொரு மாதமும் அதன் ஒரு பகுதி நமக்கு வட்டியுடன் சேர்த்து திரும்பக் கிடைக்கும். அவ்வாறு நாம் மொத்தமாகச் செலுத்திய தொகை அசலும் வட்டியுமாக முப்பத்தாறு மாதங்களில் பகுதி பகுதியாக நமக்கு கிடைக்கும். முதிர்வு காலத்தேதியில் கடைசி மாத பகுதித் தொகை நம் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்பட்டபின் அந்த வருடாந்திர வைப்புக் கணக்கு முடிக்கப்படும்.

வருடாந்திர வைப்பு நிதித் திட்டம், கையில் ஒரு பெருந்தொகை உள்ளது, அதிலிருந்து நம் மாதச் செலவுகளை நிர்வகிக்கவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம். காரணம் ஒவ்வொரு மாதமும் செலவுக்கான பணம் கிடைக்கும். அதேநேரம் பணத்திற்கு வட்டியும் வங்கி  நிர்ணயித்தபடி கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கையில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

அவர்களின் மாத செலவுக்குப் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றால் இந்த திட்டத்தில் அந்த ஒரு லட்சம் ரூபாயைச் செலுத்தினால் மாதாமாதம் பத்தாயிரம் ரூபாயும் அதனுடன் எஞ்சியுள்ள அசலுக்கேற்பக் குறையும் வட்டி விகிதத்தில் (Interest on Diminishing Principal) செலுத்திய தொகைக்கும் அதிகமாக பணம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை நாம் திரும்பப் பெறவேண்டுமெனில் எவ்வளவு தொகையை நாம் மொத்தமாகச் செலுத்தவேண்டுமோ அதுவே இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாகும். அதாவது மாதா மாதம் நாம் குறைந்தது ஆயிரம்  ரூபாய் திரும்பப் பெறவேண்டும். அவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டமே இது.

ஒரு சில வங்கிகளில் மட்டும்தான் இந்தத் திட்டம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இன்னும் சுலபமாகச் சொல்லவேண்டுமென்றால் தொடர்வைப்புக் கணக்கை (Recurring Deposit Scheme) தலை கீழாக மாற்றினால் அதுவே வருடாந்திர வைப்புத் திட்டம். தொடர்வைப்புத் திட்டத்தில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் செலுத்தி அசலும் வட்டியாக ஒரு பெருந்தொகையை வைப்பின் முதிர்வு நாளில் பெறுகின்றோம். இங்கே பெருந்தொகையை முதலில் செலுத்தி மாதா மாதம் அசலின் பகுதியை வட்டியுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் திரும்பப் பெறுகின்றோம். இறுதியில் அசல் நிலுவையில் இருக்காது. ஆண்டுக்கொருமுறை வருமானம் கிடைக்கும் விவசாயிகளுக்கு வருடாந்திர வைப்புத் திட்டம் பயன்தருவதாகும்.

பலவிருப்ப வைப்புத் திட்டம் (Multi Option Deposit) என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வைப்புத் திட்டங்கள் வங்கிகளில் உள்ளன. நாம் நமது தேவைக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து பயனடைய வேண்டும்.

மகளிருக்கான சலுகைகள்

சில வங்கிகள் மகளிருக்கென்று சலுகைகள் அளிக்கும் திட்டங்களையும் வழங்குகின்றன. வங்கி வழங்கும் கடனுதவிகளைப் பொறுத்தவரையில் சலுகை என்பது பெண்களின் பெயரில் வீடு வாங்க / கட்ட கடன் பெற்றால் கடனுக்கான வட்டி விகிதத்தில் ஒன்று முதல் அரை சதவிகிதம்வரை குறைக்கப்படுகின்றது. ஆனால் வைப்புத் தொகைக்குப் பொதுவாக மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுவதுபோல மகளிருக்கென்று அதிக வட்டி வழங்கப்படுவதில்லை.

* கணக்கு வைத்திருப்பவர்களின் வீட்டிற்கே அங்கீகரிக்கப்பட்ட / அறிமுகப்படுத்தப்பட்ட வங்கி  அலுவலர் நேரில் வந்து வங்கிச் சேவைகள் வழங்குதல்

* குறிப்பிட்ட வணிக மையங்களில் வாடிக்கையாளர் வாங்கும் குறிப்பிட்ட பொருட்களுக்கு விலைச்சலுகை  

*தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் எத்தனைமுறை / எவ்வளவு உச்சவரம்பு பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு இல்லாமல் அவர்களின் கணக்கில் உள்ள அளவுவரை பணம் எடுக்கும் வசதி.

*கணக்கு வைத்திருக்கும் வங்கி தவிர மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களிலும் கட்டணமின்றிப் பணம் எடுக்கும் வசதி.

*ஒரு குறிப்பிட்ட உச்சவரம்புத் தொகைவரை விபத்து / இறப்பு காப்பீடு

*பற்று அட்டை (Debit  Card) என்னும் ஏ.டி.எம் அட்டைக்கான கட்டண நீக்கம்.

*வெகுமதி புள்ளிகள் (Reward Points) சேகரிப்பு வசதி.  இந்தப் புள்ளிகள் அவ்வப்போது வங்கி  அறிமுகப்படுத்தும் சில சலுகைகளைபெற உதவும்.

*பாதுகாப்புப் பெட்டக (Safe  Deposit Locker) வசதி பெற்றிருந்தால் அதற்கான முதல் வருடக் கட்டணத்தில் 50% வரை கட்டணக் குறைப்பு.

*முதல் வருடக் கட்டணம் இல்லாமல் கடன் அட்டை (Credit Card) பெற்றுப் பயன்படுத்தும் வசதி.

*பெட்ரோல் வங்கிகளில் கடன் அட்டை (Credit Card) அல்லது பற்று அட்டையைப் (Debit Card) பயன்படுத்தினால் குறிப்பிட்ட அளவிற்குப் பணம் மீளப்பெறுதல் (Cash  Back offer)

*வங்கிக் கிளையில் மகளிருக்கு வங்கிச் சேவைகள் வழங்க தனி சேவையிடம் (Women Service Counters)

மேலே குறிப்பிட்ட இத்தனைச் சலுகைகளையும் தாண்டி இன்னும் பல சலுகைகளையும் வங்கிகள் வழங்குகின்றன. காரணம் இந்த உலகத்தில் சேமிக்கும் எண்ணமே முதலில் தோன்றியது பெண்களிடம்தான். அன்பைச் சேமித்து அதிகமாக வழங்குபவர்கள் பெண்கள். கருவைச் சேமித்து சந்ததிகளை உயிரூட்டி வழங்குபவர்கள் பெண்கள். அடுக்களை முதல் அலுவலகம், ஆகாயம் வரை எங்கு பார்த்தாலும் சேமிப்பில் முதல்வரே பெண்கள்தான்.

நீரை ஏந்திவந்து நிலத்தில், வயல்வெளிகளில் சேமிக்கும் நதிகளை காவேரி, கங்கா, யமுனா, நர்மதா, கோதாவரி, சிந்து, வைகை, தாமிரபரணி என்று பெண்களின் பெயரால்தான் அழைக்கின்றோம். அதேசமயம் வங்கிகள் வணிக நோக்கில் இயங்குவதால் அதிகமான பணத்தைச் சேமிக்கும் பெண்களுக்கே இந்தச் சலுகைகள் வழங்கப்படுவதும் மிகச் சரியானதுதான்.

மூத்த குடிமக்களுக்கான வைப்புத் திட்டங்கள்

மூத்த குடிமக்களுக்கான வைப்புத் திட்டங்கள் (Senior Citizen Deposit Scheme) என்பன 60 வயது பூர்த்தியான நபர்களுக்கான வைப்புத் திட்டமாகும். மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்குகளுக்குப் பெரும்பாலான வங்கிகள் அதிக வட்டியை வழங்குவதில்லை. ஆனால் மூத்த குடிமக்கள் வைப்புக் கணக்குகளுக்கு மற்றவர்களுக்கு வழங்கப்படும் வட்டியைவிட கூடுதலாக 0.50 % வட்டி கணக்கிட்டு வழங்கப்படுகின்றது. ஆனால் வைப்புத் தொகை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு என்றிருக்க வேண்டும். சில வங்கிகள் ஐந்து மற்றும் அதற்கு அதிகமான கால முதிர்வுள்ள (Maturity  Period) வைப்புகளுக்கு கூடுதல் வட்டி விகிதம் 0.25% என்று நிர்ணயித்துள்ளதையும் அறியவேண்டும்.

அந்தந்த வங்கிக்குச் சென்று வட்டிவிகிதத்தை அறிந்துகொண்டு கணக்குத் துவங்குவது நல்லது. மூத்த குடிமக்கள் நிதானமாக அமர்ந்து தங்களின் கணக்கு விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வசதியாக வங்கிகளில் அவர்களுக்கென்று தனியாக சேவையிடம் (Senior Citizen Service Counters) அமைத்துச் செயல்படுவதைக் காணலாம். இந்த வசதி இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டளைப்படி அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதற்குரிய பெயர்ப்பலகையும் வருபவரின் பார்வையில் படும்படி அமைத்திருக்கவேண்டும்.

சில பெரிய வங்கிக் கிளைகளில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனி சேவையிடம் அமைக்கப்பட்டுச் செயல்படுகின்றன. ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்துள்ளவரின் பிறந்த தேதி பதிவாகி உள்ளதால் அந்த வாடிக்கையாளர் 60 வயது அடையும்போது வங்கியே அவரின் கணக்கை மூத்த குடிமக்கள் கணக்காக மாற்றவேண்டும் என்றும், அந்த வாடிக்கையாளர் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லையன்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை அறிவுறுத்துகின்றது.

பிற வசதிகள்

சேமிக்கத் துவங்கும்போதே வங்கிகளில் நமக்குக் கிடைக்கும் பிற வசதிகள் என்னென்ன... அவற்றை எப்படி நாம் பெற்றுப் பயனடையலாம்.

*தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (Automated Teller  Machine)
*இணையதள வங்கிச்சேவை (Internet Banking)
*கடன் அட்டைகள் (Credit Card)
*பற்று அட்டைகள் (Debit Cards)
*கைபேசி வங்கியியல் (Mobile Banking)
*பாதுகாப்புப் பெட்டக வசதி (Safe Deposit Lockers)
*முன்னுரிமை வங்கியியல் (Priority Banking)
*நிலைக்கட்டளைகள் (Standing Instruction)
*பரிசு அட்டைகள் (Gift Cards)
*கிழிந்த / சேதமடைந்த / அழுக்கடைந்த பணத்தாள்களை மாற்றும் வசதி.

நாம் ஒவ்வொருவரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கி வசதிகளை பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்

பொதுவாக ஏ.டி.எம் குறித்து நம்மில் பலருக்குத் தெரியும். நமது சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கிற்காக வங்கி வழங்கும் ஏ.டி.எம் அட்டை பயன்படுத்தி பணம் எடுக்கலாம் அல்லது நமது கணக்கில் உள்ள பண இருப்பைத் தெரிந்து கொள்ளலாம். ஏ.டி.எம் அட்டையுடன் வழங்கப்படும் ஏ.டி.எம் பின் (ATM PIN) என்னும் அடையாள எண் என்பது கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் கையெழுத்துக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது. அதனை தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில், வணிக வளாகங்கள் அல்லது உணவகங்களில் பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர் கையெழுத்துப் போட்டு தன் கணக்கிலிருந்து பணம் பெற்றதாகும் என்று ஒப்பந்தச் சட்டம் (Law of Contract) வரையறுத்துள்ளது. வங்கியில் சேமிப்புக் கணக்கைத் துவக்கிவிட்டோம். ஏ.டி.எம் அட்டையைப் பெற்றுவிட்டோம். ஏ.டி.எம் வசதியைப் பயன்படுத்துவது குறித்து  செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செய்யக்கூடியவை

*ஏ.டி.எம் அறைக்குள் வங்கிக் கணக்கு வைத்துள்ள ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டும். முதல் முறையாகச் செல்பவர் என்றால் தனக்கு மிகவும் தெரிந்தவர் அல்லது வங்கி அலுவலரின் உதவியை நாடலாம்.

* முதல்முறையாக ஏ.டி.எம் அட்டையை ஏ.டி.எம் தானியங்கி இயந்திரத்தில்தான் பயன்படுத்த வேண்டும். மற்ற இடங்களில் பயன்படுத்தக் கூடாது. ஒருமுறை ஏ.டி.எம்மில் பயன்படுத்தியபின் அனுமதிக்கப்பட்ட பிற சேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

* ஏ.டி.எம் பின் (ATM PIN) என்னும் குறியீடு எண்ணை மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். எதிலும் குறிப்பாக ஏ.டி.எம் அட்டையில் எழுதி வைத்துக் கொள்ள கூடாது.

*ஏ.டி.எம் அட்டையைப் பாதுகாப்பாக, நாம் நம்முடைய பணப்பையை வைப்பதுபோல வைத்துக் கொள்ள வேண்டும்.

*ஏ.டி.எம் பயன்படுத்தும்போது நமக்குப் பின்னால் நின்றுகொண்டு நாம் இயந்திரத்தில் பதியும் குறியீடு எண்ணை எவரும் கவனிக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும்.

*ஏ.டி.எம் குறியீடு எண்ணை நாம் முதன்முதலில் வங்கியிலிருந்து பெற்றவுடன் நமக்கு நினைவில் கொள்ளக்கூடிய எண்ணாக வங்கி அலுவலரின் உதவி பெற்று மாற்றிக்கொள்ளவேண்டும்.

*ஏ.டி.எம் அட்டையின் பின்புறமுள்ள காந்தப் பட்டை (Magnetic Stripe) பழுதானால் அட்டை வேலை செய்யாது.

*ஏ.டி.எம்மில் நமது செயல்பாடு முடிந்தவுடன் அட்டையையும், பரிவர்த்தனை ரசீதையும் கவனமாக எடுத்துச் செல்லவேண்டும்.

*நமது கைபேசி எண்ணை (Mobile phone Number) வங்கியில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு செய்வதால் ஏ.டி.எம் பயன்படுத்தியவுடன் நமது கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி மூலம் கணக்கின் நடவடிக்கை தெரியவரும்.

*நாம் ஏ.டி.எம்மில் அட்டையைப் பயன்படுத்துவதற்கு முன் ஏ.டி.எம் திரையில் வரவேற்பு வாசகம் (Welcome  Screen) இருக்கும். நாம் பயன்படுத்தியபின் அதே திரை வந்தபிறகுதான் ஏ.டி.எம் அறையைவிட்டு வெளியே வரவேண்டும்.

ஏ.டி.எம் பயன்படுத்தும்போது செய்யக்கூடியவைகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டபோது, நாம் செய்யக்கூடாதவை குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுவது இயல்பு. அவற்றைப் பற்றி அடுத்த இதழில் பேசுவோம்.

 (தொடரும்!)

எஸ்.விஜயகிருஷ்ணன்

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்