டேராடூன்: இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக உடல் முழுவதும் களிமண்ணை பூசிக் கொண்ட உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சம்பாவத் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தனக்பூர் கிராமத்திற்கு சென்றார். இந்த கிராமம் நேபாள எல்லையை ஒட்டி உள்ளது.
‘நவயோக் சூர்யோதயா சேவா சமிதி’ என்ற அமைப்பு நடத்திய இயற்கை மருத்துவம் மற்றும் நவயோக நிகழ்ச்சியில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார். அங்கு அவருக்கு இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக வெற்று உடலில் அவரது உடல் முழுவதும் களிமண் பூசட்டப்பட்டது. முதல்வரின் அடையாளமே தெரியவில்லை. அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி உடன் வந்த அதிகாரிகள் குழுவினரும் முதல்வரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘இயற்கை மருத்துவம் மற்றும் சிகிச்சை என்பது ஆகாயம், நீர், நெருப்பு, காற்று, பூமி ஆகிய ஐந்தையும் அடிப்படையாகக் கொண்டது. களிமண்ணை உடலில் பூசிக் கொண்டு சூரிய ஒளியில் அமர்ந்து கொண்டு சிகிச்சை எடுப்பதால் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பெறும். நாள்பட்ட நோய்கள் மற்றும் தோல் தொடர்பான நோய்களுக்கும் பலனளிக்கும்’ என்றனர்.