×

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பஞ்சாயத்து மேலக்கடலாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 128 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமையாசிரியையான சற்பிரசாதமேரி தனது சொந்த பணத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினார். இந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

தலைமையாசிரியை சற்பிரசாதமேரி பேசுகையில் ‘‘பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒரு நாளில் இரண்டு முறை பராமரிக்கப்படும் கழிவறை, சத்துணவு மற்றும் அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடலாடி, மேலக்கடலாடி மற்றும் அருகிலுள்ள கே.கரிசல்குளம், இந்திரா நகர், தேவர் நகர் உள்ளிட்ட கிராம மக்கள், வரும் கல்வியாண்டில் எங்கள் பள்ளியில் அதிகளவு மாணவர்களை சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் வழங்கப்பட்டது’’ என்றார். அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.



Tags : H.M. , H.M. offered free bicycles to class 1 students to increase student enrolment
× RELATED ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில்...