×

தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தொடங்கியது. துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் 1080 இடங்களில் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப் 1 முதல்நிலைத்தேர்வு நடைபெற்று வருகிறது.  200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது.

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு இன்று (19-11-2022) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத தகுதியானவர்கள் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியுள்ளது.  இந்த தேர்வானது பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.


Tags : Tamil Nadu , Deputy Collector, Police DSP, Group 1 Preliminary Examination,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...