ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா(85) கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பரூக் அப்துல்லா போட்டியிடாததால் கட்சியின் துணை தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.