×

அம்பத்தூரில் நள்ளிரவு பரபரப்பு தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து பெண் கொலை: தப்பிய 2வது கணவருக்கு வலை

அம்பத்தூர்: அம்பத்தூரில் நள்ளிரவில் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான 2வது கணவரை தேடி வருகின்றனர். அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரை சேர்ந்தவர் பவித்ரா (28). இவர், கடந்த சில  வருடங்களுக்கு முன், செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்  பிரிந்தனர்.

இதையடுத்து, பெற்றோர் வீட்டில் வசித்து வந்த பவித்ராவுக்கு, அதே பகுதியை சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ராஜா (33) என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து  ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களிடையே, கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ராஜா சரமாரியாக பவித்ராவை தாக்கியதால் அவர் அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து பவித்ரா கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான தனிப்படை அமைத்து, தப்பிய ராஜாவை தேடி வருகின்றனர்.


Tags : Ambattur , Tali rope, femicide, net for 2nd husband
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...