தானே: வீர் சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தானே நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர், இந்துத்துவ கொள்கைகளை பரப்பியவர். 1910ம் ஆண்டு நாசிக்கில் கலெக்டர் ஜாக்சன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய அரசுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தின் நகலை, மகாராஷ்டிராவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் வெளியிட்டார். இதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும், சிவசேனாவின் இருபிரிவுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியின் தானே நகர கிளை உறுப்பினரான வந்தனா டோங்ரே என்ற பெண், சாவர்க்கரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தானே நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.