×

சவாரி அழைத்து சென்று மூதாட்டி கம்மல் அபேஸ்: ஆட்டோ டிரைவர் கைது

பெரம்பூர்: மூதாட்டியை ஏமாற்றி ஆட்டோவில் அழைத்துச் சென்று தங்க கம்மலை கழட்டிக்கொண்டு கீழே தள்ளி விட்டு சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் எஸ்எஸ்வி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரோஜா (75). இவர் கடந்த செவ்வாய்கிழமை மாலை கடைக்கு செல்வதற்காக மாதவரம் நெடுஞ்சாலை பிருந்தா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ஆட்டோவை ஓட்டி வந்து, உங்களது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே என்னுடன் வாருங்கள் நான் ஆட்டோவில் அழைத்து செல்கிறேன் என்று கூறி மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெரு அருகே உள்ள இடத்தில் வந்து நிறுத்தி அவர் காதில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க கம்பலை கழட்டிக்கொண்டு வலுக்கட்டாயமாக ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டி லேசான காயங்களுடன் எழுந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பெயரில் அங்கு வந்த செம்பியம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநரை தேடிவந்த நிலையில், சிசிடிவி கேமரா காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்துப் பார்த்ததில் ஏற்கனவே சில குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர், இதில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, ரெட்ஹில்ஸ் எடப்பாளையம் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்த சுந்தர் (34) என்ற நபரை பிடித்து, செம்பியம் போலீசார் விசாரணை செய்ததில், மூதாட்டியை ஏமாற்றி நகை திருடிகொண்டு அவரை கீழே தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சுந்தர் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kammal Abes , Taking a ride to old lady Kammal Abes: Auto driver arrested
× RELATED கர்நாடகாவில் இருந்து சித்தூருக்கு...