சென்னை: பூக்கடை பகுதியில் சாப்பிட்டும் போது சிக்கன் துண்டை எடுத்து சாப்பிட்ட தகராறில் அண்ணன் மகனை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான சித்தப்பாவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, ரத்தன் பஜார், நடைபாதை பகுதியில் வசித்து வரும் பாலாஜி (38) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது சித்தப்பா அன்பு என்பவரின் ஆட்டோவில் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அன்பு, பாலாஜி சாப்பாட்டிலிருந்த சிக்கன் துண்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். உடனே பாலாஜி, எனது சாப்பாட்டில் இருந்து சிக்கன் துண்டை எப்படி எடுத்து சாப்பிடலாம் என கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அன்பு, தனது அண்ணன் மகன் பாலாஜியை கத்தியால் குத்தினார். இந்த தாக்குதலில் ரத்த காயமடைந்த பாலாஜி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாகி இருந்த அன்புவை பூக்கடை போலீசார் தேடிவந்த நிலையில் அதே பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி விரைந்து சென்று ரத்தன் பஜார் ரோடு, பிளாட்பாரத்தில் வசிக்கும், அன்பு (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பு விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.