ஈரோடு: கொல்கத்தாவில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டு வரும் பெருந்துறையை சேர்ந்த இளம்பெண்னை மீட்டு வரும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் இறங்கி உள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (46). இவரது மனைவி ஜோதி (42) இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு எஸ்பி சசிமோகனிடம் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:
எங்களது மகள் சுமித்ரா (22) கடந்த 2017ம் ஆண்டு பெருந்துறையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலம், பர்த்னமானை அடுத்த கலான்பூர் அம்தோப் பகுதியை சேர்ந்த சுப்ரத தாஸ் என்பவர் மகள் சுமித்ராவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கொல்கத்தாவுக்கு கடத்தி சென்று விட்டார்.
எங்கள் மகள் காணாமல் போனதாக கருதி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், எங்களது மகள் சுமித்ரா போனில் தொடர்பு கொண்டு, தான் கொல்கத்தாவில் சுப்ரத தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக கூறினார். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன் எங்களது மகள் போன் செய்து தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறினாள். இதையடுத்து, அவ்வப்போது மகள் சுமித்ராவுடன் போனில் பேசிக் கொண்டு இருந்தோம். மகள் நல்லபடியாக வாழ்ந்து வருவதாக எண்ணியிருந்த நிலையில் கடந்த 3 மாதமாக எங்களது மகளை, சுப்ரத தாஸ் குடிபோதையில் அடித்து துன்புறுத்துவதாகவும், சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், மேலும் சாப்பாட்டில் சிறுநீர் கழித்து கொடுத்து கொடுமைப்படுத்துவதாகவும் கூறினார்.
இந்நிலையில், எங்களது மகள் பக்கத்து வீட்டு பெண்ணிடம் இருந்து செல்போனை வாங்கி, வாட்ஸ் அப் வீடியோ காலில் கதறி அழுதாள். எனவே, கொல்கத்தாவில் கடும் சித்ரவதைக்கு ஆளாகியுள்ள எங்களது மகளை போலீசார் மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.மேலும், வாட்ஸ் அப் வீடியோ கால் உள்ளிட்ட ஆதாரங்களையும் போலீசாரிடம் தாக்கல் செய்திருந்தனர்.இதையடுத்து கொல்கத்தாவில் சிறைபட்டுள்ள சுமித்ராவை மீட்டு வருவதற்காக 4 பேர் கொண்ட தனிப்படை அமைத்து கொல்கத்தாவில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வர எஸ்.பி. சசிமோகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் ஈரோட்டில் இருந்து கொல்கத்தா புறப்பட்டனர். நேற்று மதியம் கொல்கத்தா சென்ற தனிப்படை போலீசார், அங்கு இளம்பெண் அடைத்து வைக்கப்பட்டுள்ள வீட்டை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.