சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் ஆகியவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்க்கு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதி டி.ராஜாவிற்கு இன்னும் ஆறு மாதங்களே பணிக்காலம் உள்ள நிலையில் பணியிட மாற்றம் என்பது நீதித்துறைக்கான கெட்ட செய்தி.டி.ராஜாவின் பணியிட மாற்ற பரிந்துரையை திரும்ப பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே அவர் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீதிபதி டி.ராஜா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லா அசோசியேஷன் சார்பில் அதன் தலைவர் எல்.செங்குட்டுவன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஓய்வின் விளிம்பில் உள்ள நீதிபதி டி.ராஜாவை அவரின் ஒப்புதல் இன்றி பணியிட மாற்றம் செய்வதற்கு பரிந்துரைத்தது ஆரோக்கியமான சூழல் அல்ல எனக் கூறியுள்ளார்.