×

எடப்பாடி பழனிசாமி பேச்சு கூட்டணிக்குள் புதிய சலசலப்பு: நாங்கள் நினைத்தால் அதிமுக தலைவர்கள் சிறையில் இருந்தபடிதான் பிரசாரம் செய்ய முடியும்: பாஜ

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் பேச்சால், பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி நீடித்தாலும் இரு கட்சிகளிடையேயும் உரசலும், சலசலப்பும் தற்போது அதிகமாகத் தொடங்கி இருக்கிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜதலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதற்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைய வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

ஒற்றைத் தலைமை பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராததால் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜனதா தலைவர்களுடன் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக தன்னை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால் அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி விட்டார். மேலும் அ.தி.மு.க. என்றால் நான்தான். என்னிடம் தான் கட்சி ரீதியான தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார். இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகும் பா.ஜனதா தலைவர்கள் நிர்பந்திப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை வழிக்கு கொண்டு வர அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையும், அமலக்காத்துறையும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.

கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திப்பதையும் எடப்பாடி தவிர்த்து விட்டார். இதுபற்றி எடப்பாடி கூறுகையில்,  பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அதன் தலைவர்கள் வரும் போதெல்லாம் சந்திக்க அவசியமில்லை. பிரதமர் மோடி அரசு விழாவுக்கு வந்ததால், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வரவேற்க சென்றேன் என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமித்ஷாவை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர், பதவியில் இருப்பவர்களும் சந்திக்கலாம். பொதுமக்களும் சந்திக்கலாம் என்றார் அண்ணாமலை.

எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி பேச்சும், அண்ணாமலையின் பதிலடியும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறும்போது, அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே பலம் வாய்ந்த தி.மு.க.வை சமாளிக்க முடியும். எங்களுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் எந்த சிக்கலும் இதுவரை இல்லை. தேவையில்லாமல் நெருக்கடி கொடுத்தால் கூட்டணிதான் உடையும். எங்களை பொறுத்தவரை 2024 பாராளுமன்ற தேர்தல் ஒரு பொருட்டே இல்லை. எங்கள் குறிக்கோள் 2026 சட்டசபை தேர்தல்தான்.

கழகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களையும், சோதனைகளையும் சந்தித்து விட்டது. எனவே எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் வல்லமை கட்சிக்கு உண்டு. எத்தகைய சவால்களையும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்றார்கள். கூட்டணியை பற்றி கவலை இல்லை என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளார். அடுத்து பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறையை பொறுத்துத்தான் இந்த கூட்டணியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்கிறார்கள்.

இது குறித்து பாஜதலைவர்கள் கூறும்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்தன. அதை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டோம். நாங்கள் நினைத்தால் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள். சிறையில் இருந்துதான் கட்சி நடத்த முடியும். கூட்டணிக் கட்சி என்பதால் எல்லா ஊழல்களையும் பொறுத்துக் கொண்டோம். இதனால் எங்களுக்குத்தான் கெட்ட பெயர். இருந்தாலும் அதையும் தாங்கிக் கொண்டு நாங்கள் கூட்டணியை தொடருகிறோம். மக்களவை தேர்தலுக்காக நாங்கள் பயப்படவில்லை. எங்களுக்கு வட மாநிலங்களில் செல்வாக்கு உள்ளது. அங்கு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக் கொள்வோம். தமிழகம் தேவையில்லை என்று நாங்கள் முடிவு எடுத்தால் அதிமுக தலைவர்கள் சிறையில் இருந்தபடிதான் பிரசாரம் செய்ய வேண்டியது வரும் என்றனர். இவ்வாறு இரு தரப்பினரும் மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளதால் அதிமுக, பாஜகூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : edapadi , Edappadi Palaniswami's speech, new commotion within the alliance, AIADMK leaders, BJP
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு