தோஹா: உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை காணவரும் ரசிகர்களை மகிழ்விக்க தடபுடல் ஏற்பாடுகள் கத்தாரில் களைகட்டியுள்ள நிலையில் ஸ்டேடியங்களில் மதுகுடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் முன்னர் சர்வதேச கால்பந்தின் சம்மேளத்தின் இந்த நடவடிக்கையால் பிரதான ஸ்பான்சர்களில் ஒருவரான பட்வைஸர் விழி பிதுங்கியுள்ளது.
பொதுவாக விளையாட்டு திருவிழா என்றாலே போட்டிகளை காட்டிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கேளிக்கை நிகழ்ச்சிகள் பொது இடங்களில் களைகட்டும். மது உச்சகட்டமாக இருக்கும். இதற்காகவே பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் போட்டி போட்டு நடக்கும் நாடுகளில் குவிந்து அமர்களப்படுத்துவது வழக்கம் ஆகும். இதனை கருத்தில் கொண்டே கத்தார் தலைநகர் தோஹாவில் இதற்கு முன்னர் இல்லாத வகையில் கண்கவர் மெகா கிளப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
லேசர், ஆட்டம், பாட்டம் என இப்போதே இந்த மதுகுடில் களைகட்டியுள்ளது. இந்த நிகிழ்ச்சி உள் அரங்கைக்காட்டிலும் ஸ்டேடியங்களில் அதிகமாகவே இருக்கும், வீரர்களின் ஒவ்வொரு அசத்தலுக்கும் ஒரு பீர் உள்ளே இறங்கும். எனவே ஸ்டேடியங்களில் பீர் ஆறாக ஓடும். ஆனால் அதற்கு ஃபிபா திடீரென தடை விதித்திருப்பது ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டி அதனை விற்கும் உரிமத்தை பெற்ற பட்வைஸர் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் பெரும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
கத்தார் அரச குடும்பத்தினரின் வலியுறுத்தலால் ஃபிபா இந்த தர்ம சங்கடத்துக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பட்வைஸர் நீதிமன்ற கதவை தட்டலாம் என்பதை அறிந்த ஃபிபா அரச குடும்பத்தினருடன் பேச்சு நடத்தியதாக தெரிகிறது. முடிவில் பீர் பாலிசியை மாற்றிக் கொண்ட கத்தார் அரசு போதை இல்லாத பீரை ஸ்டேடியங்களில் விற்க அனுமதித்துள்ளது. ஆனால் பட்வைஸரும், ரசிகர்களும் இந்த முடிவை ஏற்றுகொள்வது சந்தேகமே ஆகும்.