×

அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணம்: தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு 200 பேர் ஆன்மிகப் பயணம்  அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022-2023ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பில், “ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு நடப்பாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர் எனவும், இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்.என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை உரிய இணைப்புகளுடன் சேர்த்து, அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 15.12.2022க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags : Rameswaram ,Kashi ,Charity Department , Spiritual Journey from Rameswaram to Kashi on behalf of Charity Department: Eligible persons can apply
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை