தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாசின்னஅள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவள் இண்டூர் அருகே உள்ள கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு மாணவி சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாள். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் வழிமறித்து மாணவியை காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் மாணவி வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்தனர். மாணவி வழக்கமாக வரும் ஒத்தையடி பாதையில் உறவினர் ஒருவர் தேடிச்சென்றபோது வழியில் மாணவியின் சைக்கிள் கிடந்தது.
இதையடுத்து அப்பகுதியில் தேடியபோது மாணவி முட்புதர் பகுதியில் மயங்கி கிடந்தாள். அவளை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுபற்றி இண்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவன் மற்றும் அவரது நண்பர் ஒருவரை பிடித்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.