திருமயம் : திருமயம் அருகே மயானத்திற்கு செல்ல பாலம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்ததால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சந்தைப்பேட்டை மயானத்தை அப்பகுதியை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரமாக திருமயம் பகுதியில் பெய்யும் மழை காரணமாக மயானத்திற்கு சாலைக்கும் இடையே செல்லும் கால்வாயில் மழைநீர் சென்று கொண்டிருக்கிறது.
இதனால் கால்வாய் சேரும் சகதியுமாக உள்ளது.இந்நிலையில் மயானத்திற்கு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதோடு, மயானத்திற்கு வரும் முதியவர்கள் கால்வாயை கடக்க முடியாமல் சிரமப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகார் சம்பந்தப்பட்ட திருமயம் ஊராட்சி நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.