தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவை அடுத்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் முரளிதரன் மற்றும் துணை இயக்குநர் சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் சிறப்பு முகாம் மற்றும் கன்றுகள் பேரணி நடந்தது. இந்த முகாமில் மேலப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கன்னியப்பன், செயலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பு+சி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல் உள்பட கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது..
இதேபோல் கால்நடைகள் குறித்து சிறு கண்காட்சி அமைக்கப்பட்டு கால்நடை வளர்க்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கரூர் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டு கால்நடை வளர்க்கும் முறைகள் குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகளை கால்நடை வளர்க்கும் தொழிலாளர்களுக்கு வழங்கினர்.
அதனை தொடர்ந்து கன்றுகள் பேரணி நடந்தது. பின்னர் கன்றுகளில் சிறந்த கிடாரி கன்று தேர்வு செய்யப்பட்டு முதல் 3 கன்றுகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினர்.இதேபோல் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகள் 3 கால்நடைகள் வளர்க்கும் தொழிலாளர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டது.
கால்நடை உதவி மருத்துவர்கள் பிரேம்குமார், செந்தில், மணிகண்டன், ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளித்து பல்லேறு ஆலோசனைகளை வழங்கினர்.இதில் கால்நடைத்துறையின் உதவியாளர் கன்னியப்பன், உள்பட சுற்றுவட்டாரத்தில் இருந்து 150 கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.