×

மர்மநபர் பயணிக்கும் விமானம் வெடித்து சிதறும் சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர் பயணிக்கும் விமானம் வெடித்து சிதறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலைய இ -மெயில்க்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், ‘‘விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. குறிப்பிட்ட ஒரு மர்ம நபர் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவரது உடைமையில் வெடிகுண்டு உள்ளது. அவர் பயணிக்கும் விமானம் வெடித்து சிதறும் ஆபத்து உள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால், எத்தனை மணி, உள்நாட்டு விமான நிலையமா, சர்வதேச விமான நிலையமா என்று எந்த தகவலும் இல்லை. அதோடு, போலியாக ஐடி உருவாக்கி, அதிலிருந்து இந்த மெயில் வந்திருந்தது. ஆனாலும் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தீவிரவாதிகளை கண்காணிக்கும் க்யூ பிரிவு போலீசார், தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அனுப்பினர். அதோடு, டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன், பிசிஏஎஸ், வெடிகுணடு நிபுணர்களுக்கும் அவசர தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. விமான நிலையத்திற்கு வந்த மெயிலில், சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. பொதுவாக, விமானத்தில் குண்டு வெடிக்கும் என மட்டும் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக, ஆலோசனை நடத்தப்பட்டு ஆய்வு செய்ததில், வெளிநாடு செல்லும் பயணி ஒருவரை தடுத்து நிறுத்துவதற்காக வந்த மெயிலாக இருக்கலாம் என தெரிய வந்தது. இருப்பினும், சென்னை விமான நிலையம், விமானத்தில் பயணிக்க வரும் பயணிகள், கார் பார்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடக்கும். தற்போது கூடுதலாக, மேலும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை விமான நிலைய போலீசார் இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சைபர் கிரைம் பிராஞ்ச் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai airport , Mystery flight, Chennai airport, bomb threat on e-mail
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...