சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ளது இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம். இங்கு அறிவியலாளராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் (45). இவர் கல்பாக்கம் அடுத்த அனுபுரத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், தனது வீட்டிலிருந்து ரமேஷ் பைக்கில் அனுபுரம் மெயின் ரோட்டுக்கு நேற்று வந்துள்ளார். திருக்கழுக்குன்றத்திலிருந்து கல்பாக்கம் நோக்கி வேகமாக வந்த கார், ரமேஷ் சென்ற பைக் மீது மோதியதில், ரமேஷ் சம்பவ இடத்திலிருந்து தூக்கி விசப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனே, அவரை மீட்டு அங்குள்ள அணுசக்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் பலியான ரமேஷின் உடலை கைப்பற்றினர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் காரை ஓட்டி வந்த சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த சந்தோஷ் (30) என்பவரை கைது செய்தனர்.