×

டிவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து அமேசான் ஊழியர்கள் 10,000 பேர் பணி நீக்கம்

சியாட்டில்: டிவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து அமேசானிலும் ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கியது. உலகப் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்கினார். வாங்கிய கையோடு, டிவிட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் 4 ஆயிரம் பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்தார். இந்தியாவில் 90 சதவீத ஊழியர்களை நீக்கினார். டிவிட்டரை தொடர்ந்து, பல்வேறு சமூகவலை நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளன.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் 11 ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில், உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இது, அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும். செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது என அமேசான் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இமெயில் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அமோசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில பணியிடங்கள் அமேசான் நிறுவனத்தில் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நிறுவத்துக்குள்ளே வேறு துறைகளுக்கு (காலி இடங்கள் இருப்பின்) விண்ணப்பித்து இடம் மாறி கொள்ளலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Twitter ,Facebook ,Amazon , Twitter, Facebook, Amazon employees fired
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...