சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக, ரூபி மனோகரன், ரஞ்சன் குமார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 24ம்தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு நெல்லை மாவட்ட காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு வரும் 24ம்தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.