×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் 16.11.2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையிலடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்துவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது என்றும் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தரப்பிலிருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும், மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதாகவும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறும் செயல் இந்தியாவுக்கு ஒரு சவால் போல காணப்படுகிறது என்றும், இது தொடர்பாகத் தேவையான தூதரக நிலை நடவடிக்கைகள் எடுக்கவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Sri Lankan Navy ,Tamil Nadu ,Chief Minister ,MCM ,Department of Foreign Affairs ,K. Stalin , The fishermen and boats arrested by the Sri Lankan Navy should be released immediately: Tamil Nadu Chief Minister M.K. Stalin's letter
× RELATED இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட...