திருமலை: ஆந்திர சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலுக்கு முழுக்கு போடுவேன் என்று சந்திரபாபு தெரிவித்துள்ளார். கர்னூல் மாவட்டம் பத்திக்கொண்டாவில் நேற்று நடந்த தெலுங்கு தேச பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது: ஆந்திர சட்டசபையில் அராஜக முறையில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஜெகன்மோகன் அரசு செயல்பட்டு வருகிறது. எனது மனைவி மற்றும் குடும்ப வாழ்க்கையையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவமானப்படுத்தினர்.
இனி முதல்வராக மட்டுமே சட்டசபைக்குள் வருவேன் என சபதம் செய்துவிட்டு வெளியேறினேன். எனவே வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற ேதர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றிபெற்று நான் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றால் மட்டுமே அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன். இல்லையென்றால் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிக்கொள்வேன். எனவே நான் அரசியலில் இருப்பதும், இல்லாததும் வாக்காளர்களிடம்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.