பெரம்பூர்: வியாசர்பாடி சர்மா நகர் 4வது தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் செங்குன்றம் காவாங்கரையில் உள்ள தனது தாய்மாமா வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் நேற்று காலை 10 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 சவரன் நகை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து, எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வர்கீஸ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டில் உள்ள கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.