ஊத்துக்கோட்டை: தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் திறக்காதது ஏன் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது.
இந்த ஏரியின் கொள்ளளவு 32 அடி, கடந்தாண்டு பெய்த பெருமழை காரணமாக ஏரி நிரம்பியதையடுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் ஆந்திர பகுதியில் எதிர்பார்த்தபடி மழை பெய்யாததால் பிச்சாட்டூர் ஏரி தற்போது வரை முழு கொள்ளளவை எட்டவில்லை. தற்போது 24 அடி உயரம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பகுதியில் கனமழை பெய்தால் பிச்சாட்டூர் ஏரி நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு மழை செய்யும் பட்சத்தில் 30 முதல் 31 அடி வரை தண்ணீர் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவேளை கனமழை பெய்து பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் விவசாயிகள் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள்.