சென்னை: தமிழ்நாட்டில் 3,486 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் அதிக மழையைப் பெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக கனமழையை எதிர்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாகவே விடாமல் மழை பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 3,486 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பின.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டதில் மொத்தமுள்ள 1,340 பாசனக் குளங்களில் 964 குளங்கள் நிரம்பின. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 641 பாசனக் குளங்களில் 328 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 பாசனக் குளங்களில் 194 குளங்கள் நிரம்பின. சிவகங்கை 266, திருவண்ணாமலை 232, புதுக்கோட்டை 167, ராணிப்பேட்டை 142, திருவள்ளு 148, குளங்கள் நிரம்பின. காஞ்சிபுரம் 97, விழுப்புரம் 79, கிருஷ்ணகிரி 73, தென்காசி 74, அரியலூர் 16, ஈரோடு 14, குமரி 40 குளங்கள் நிரம்பின.