×

போதைப்பொருள் விற்ற வழக்கில் கைதான தான்சானியாவை சேர்ந்த பெண்ணை காவலில் எடுக்க போலீசார் முடிவு: கும்பலை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்

அண்ணாநகர்: அண்ணாநகர் பகுதியில் போதைப்பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்ட சிறையில் உள்ள தான்சானியா நாட்டு இளம்பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், 3 தனிப்படை போலீசார் போதைப்பொருள் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியில் கடந்த 12ம் தேதி காரில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த தான்சானியா நாட்டை சேர்ந்த பிர்ஸ்க்கா அம்சா (28) என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள சுமார் 10 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் போதைப் பொருட்களை வாட்ஸ்அப் மூலம் பேசி விற்பனை செய்து வந்ததும், இவருக்கு கோகையினை பெங்களூரூவை சேர்ந்த  மிக் என்பவர் சப்ளை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பிர்ஸ்க்கா அம்சாவுக்கு கோகைன் சப்ளை செய்த முக்கிய குற்றவாளியை கைது செய்யவும், வாட்ஸ்அப் மூலம் பேசிய போன் நம்பர்களை கண்டறிந்து, அந்த கும்பலை பிடிக்கவும் அண்ணாநகர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையினர்  பெங்களூரூ, கோயம்புத்தூர் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளுக்கு சென்று பிர்ஸ்க்கா அம்சா வாட்ஸ்அப்பில் பேசிய போன் நம்பர் மூலம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் போதைப்பொருட்கள் கும்பலை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே சிறையில் உள்ள பிர்ஸ்க்கா அம்சாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. அவரை காவலில் எடுத்து விசாரணை செய்யும் பட்சத்தில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags : Tanzania , Drug, sold case, Tanzania, female. Police, police decision, 3 personal intensity
× RELATED வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு தான்சானியாவில் 63 பேர் பலி