×

மீன் பிடிக்கும்போது புழல் ஏரி கால்வாயில் தவறி விழுந்தவர் பலி: 3 நாளுக்கு பின் உடல் மீட்பு

புழல்: மீன் பிடிக்கும்போது, புழல் ஏரிக் கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக பலியானார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு ஏரியில் மீட்கப்பட்டது. செங்குன்றம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (23). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12ம் தேதி தனது நண்பர்களுடன் ஆலமரம் பகுதியில் உள்ள புழல் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தவறி கால்வாயில் விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் ஏரியில் இறங்கி சடலத்தை தேடும் பணியில் கடந்த மூன்று நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை அம்பத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட புழல் ஏரியில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Fish, Pond, Fallen, Sacrifice, 3 Body Recovery
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...