வேலூர்: வேலூர் மாவட்ட காவல்துறையில் கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்பநாய் பிரிவில் லூசி, சிம்பா, அக்னி, சாரா, ரீட்டா ஆகிய 5 நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் லூசிக்கு அதிக வயதானதால் ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் சிம்பா, கொலை, கொள்ளை குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2013 பிப்ரவரி 22ம் தேதி முதல் இதுவரை 250க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்ப நாய் சிம்பா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிம்பாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அதற்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சை அளித்தும் பலனின்றி மோப்ப நாய் சிம்பா நேற்று இறந்தது. சிம்பாவின் உடலுக்கு எஸ்பி ராஜேஷ்கண்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மோப்பநாய் பிரிவு கட்டிட வளாகத்தில் சிம்பா உடல் அடக்கம் செயயப்பட்டது.