மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக கரடி ஒன்று நடமாடி வருகிறது. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடி, இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த கரடி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை ஒட்டி அமைந்திருந்த சமையல் அறையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. தொடர்ந்து மற்றொரு கதவையும் உடைத்தெறிந்த கரடி, அங்கு வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணெய்யை குடித்துவிட்டு பொருட்களையும் கீழே தள்ளி சூறையாடி சென்றது. தகவலறிந்த வனத்துறையினர் நேற்று பள்ளிக்கு சென்று பார்வையிட்டு ஆசிரியர்களிடம் விசாரித்து சென்றனர்.