சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு பொது பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவியில் காலியாக உள்ள 50 பணியிடங்களுக்கு கடந்த மே மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் முதன்மை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 467 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு 103 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் விவரத்தை தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறும்.