×

கரூர் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுமானப் பணி விஷவாயு தாக்கி 3 தொழிலாளி பலி

கரூர்: கரூர் அருகே புதிய வீட்டின் கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியில் 3 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியானார்கள். கரூர் சுக்காலியூர் அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் குணசேகரன். அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டையொட்டி கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டும் பணியும் நடைபெற்றது. இந்த பணிகள் முடிந்த நிலையில் நேற்று மதியம் 3மணியளவில், கழிவுநீர் தொட்டியின்  உட்புறம் இருந்த சென்டரிங் சவுக்கு கட்டைகள் மற்றும் பலகைகளை அகற்றுவதற்காக கரூர் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மோகன்ராஜ் (23), கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (38) என்பவரும் உள்ளே இறங்கினார்.

அவரும் வெளியே வரவில்லை. இதனால் மணவாசியை சேர்ந்த சிவா (எ) ராஜேஷ்குமாரும் (35) கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவரும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த மற்ற பணியாளர்கள், கரூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி பார்த்து போது அங்கு 3 பேரும் மயக்க நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாந்தோணிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Karur , 3 laborers killed in gas attack near Karur
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...