உத்திரமேரூர்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் சாலவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத்தலைவர் என்.எஸ்.ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஞானசேகர், தமிழ்வேந்தன், சுஜாதா, பாலமுருகன், வெங்கடசுப்பிரமணி, பாண்டியன், பாபுஷரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், “இளைஞர்கள் திமுக வளர்ச்சி பணிகளில் ஈடுபடவேண்டும். வாக்குச்சாவடி முகவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி, ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.
17 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். இதில், உத்திரமேரூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் வசந்தி குமார், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைவேல், சேகர், சந்திரா பவுன்சின்ராஜ், கல்யாண சுந்தரம், நதியா கோபி, சுப்பிரமணி, அன்புராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.