×

ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் கைரன் பொல்லார்ட்: ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கைரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார். மும்பை அணிக்காக கடந்த 13 ஆண்டுகள் ஐபிஎல் தொடர்களில் விளையாடிய கைரன் பொல்லார்ட் எதிர்வரும் 2023 ஐ.பி.எல் தொடரிலும் அவர் விளையாடுவர் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொலார்ட். 13 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய பொலார்ட், 5 முறை ஐபிஎல் கோப்பையை மும்பை வெல்ல உதவியாக இருந்துள்ளார்.

அவர் இம்முறை மும்பை அணியால் தக்கவைக்கப்படமாட்டார் என தகவல் வந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்த முடிவை எடுப்பது சுலபமாக இல்லை. ஏனெனில் இன்னும் சில வருடங்களுக்கு விளையாட நான் தயாராக இருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விவாதித்த பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன் என்று கூறினார்.
என்னால் மும்பை அணிக்குத் தொடர்ந்து விளையாட முடியாது என்றால் அந்த அணிக்கு எதிராகவும் விளையாட முடியாது.

மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான். எனினும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளேன். எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளேன், மும்பை போன்ற ஒரு வெற்றிகரமான அணியில், கடந்த 13 ஆண்டுகளாக விளையாடியதற்கு தான் மிகவும் பெருமை படுவதாகவும், உலகின் மிகவும் திறமைவாய்ந்த வீரர்களுடன் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டதோடு, மும்பை அணியின் உரிமையாளர்களான முகேஷ் அம்பானிக்கும், நீட்டா அம்பானிக்கும், ஆகாஷ் அம்பானிக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். ஐபிஎல் தொடரில் 189 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட் 3,412 ரன்களையும், 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து, மும்பை அணியின் அசைக்க முடியாத வீரராக விளங்கிய அவர், ஐந்து முறை கோப்பையை வென்ற அணயில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Kieron Pollard ,IPL , Kieron Pollard retires from IPL: Fans shocked
× RELATED கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா