விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் இருளர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். கடந்த 2011 நவம்பர் மாதம் திருட்டு வழக்கு விசாரணை என்று கூறி இருளர்கள் குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தியதோடு, ஒரு கர்ப்பிணி மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பெண்களை, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று திருக்கோவிலூர் போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன், சிறப்பு எஸ்ஐ ராமநாதன், ஏட்டு தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் மீது வழக்குப்பதிந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விழுப்புரத்தில் உள்ள எஸ்சிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது அரக்கோணம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஸ்ரீனிவாசன், ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த மே 16ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது ஸ்ரீனிவாசன் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீனிவாசன் விழுப்புரம் எஸ்சிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி பாக்கியஜோதி முன்னிலையில் சரணடைந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.