சென்னை: தமிழகத்தை காசநோய் பாதிப்பே இல்லாத மாநிலமாக மாற்றுவதே இலக்காக வைத்துள்ளோம் என்று மாநில காசநோய் அதிகாரி டாக்டர் ஆஷா பெட்ரிக் கூறினர். இது குறித்து மாநில காசநோய் அதிகாரி டாக்டர் ஆஷா பெட்ரிக் கூறுகையில்: காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 75% நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. மழை மற்றும் குளிர்காலங்களில் இது அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தும். அதன்படி மழைக்காலங்களான அக்டோபர் மற்றும் குளிர்காலமான பிப்ரவரி மாதங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும். கடந்த மூன்று மாதங்களில் 50 ஆயிரம் பேருக்கு காசநோய்க்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனையில் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் 25% பேருக்கு சர்க்கரை நோயினால் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் காசநோய் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 32 வாகனங்கள் மூலம் காசநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதைப்போன்று பள்ளிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் காசநோய் பாதிப்பே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். நீலகிரி மாவட்டத்தில் 40% காசநோய் பாதிப்பு குறைந்ததால் தேசிய அளவில் வெள்ளி பதக்கமும், திருவண்ணாமலை, சிவகங்கை, வேலூர், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், நாகை மாவட்டங்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டது என்றார்