சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் நடைபயிற்சி சென்ற போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்து. அப்போது காவல்துறை தரப்பில், ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.