சென்னை: திமுக முன்னாள் எம்பி ஜின்னா மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஜின்னா மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு உற்ற நண்பராக, சிறந்த வழக்கறிஞராக விளங்கிய ஜின்னா என் மீது நீங்காப் பற்று கொண்டவர். வழக்கறிஞரான அவரையே மிசா சிறைவாசம் விட்டு வைக்கவில்லை. முரசொலி செல்வத்தின் நெருங்கிய, இணை பிரியா நண்பர். அவரைத் தனது “பிரண்டு, பிலாசபர் அண்ட் கைடு” என்று அடிக்கடி ஜின்னா கூறுவார்.
அவருடைய “வாழ்க்கைப் பாதை” என்ற புத்தகத்திற்கு அண்மையில் தான் எனது வாழ்த்துச் செய்தி அளித்து, அவரது வழக்கறிஞர் சேவையையும் திமுக தொண்டினையும் பாராட்டியிருந்தேன். திமுகவின் முக்கிய கொள்கைப் பிரசாரத் தூணாக விளங்கிய அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.