×

உறவினர் நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட மனைவி திடீர் மரணம் அதிர்ச்சியில் கணவர் தற்கொலை: அயனாவரத்தில் சோகம்

பெரம்பூர்: அயனாவரத்தில் பிரியானி சாப்பிட்ட மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அயனாவரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் தம்புசாமி (53), பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவானி (47). இவர்களுக்கு 23 வருடங்களுக்கு முன்பு திருமணமானது.. தம்பதிக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பவானி தனது அக்கா பார்வதியுடன் அயனாவரம் மேட்டு தெருவில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பவானிக்கு திடீரென லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கா பார்வதி பவானியை மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பவானியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு மருத்துவமனைக்கு வந்த பவானியின் மகள் யுவஸ்ரீ மற்றும் அவரது அக்கா பார்வதி ஆகியோர் மருத்துவமனையில் கதறி அழுதனர்.
இதுகுறித்து, யுவஸ்ரீ தனது தந்தை தம்புசாமிக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தம்புசாமி மனைவியின் உடலை பார்த்து பதறிப்போனார். சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் சொல்லாமல் நேராக தனது வீட்டிற்கு தனியாக சென்று விட்டார். நீண்ட நேரம் ஆகியும் தம்புசாமி மீண்டும் மருத்துவமனைக்கு வராததால், அவரது மகள் யுவஸ்ரீ போன் செய்தார்.

அப்போது, தம்புசாமி போன் எடுக்காததால் உயிரிழந்த பவானியின் உடலை பெரியம்மா பார்வதியுடன் ஆட்டோவில் வீட்டிற்கு யுவஸ்ரீ கொண்டு சென்றார். அப்போது சமையலறையில் தம்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு மகள் யுவஸ்ரீ மற்றும் உறவினர் பார்வதி 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அயனாவரம் போலீசார் தம்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி உயிரிழந்த சோகத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே கணவனும் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அயனாவரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : biryani ,Ayanavaram , Sudden death of wife who ate biryani at a relative's function, shocked husband commits suicide: Tragedy in Ayanavaram
× RELATED இந்தியாவின் பிரியாணி தலைநகரமாக...