×

கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சடலத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்: விரைவில் உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை

சத்தியமங்கலம்; கடம்பூர் மலைப்பகுதியில் ஆறுகளின் குறுக்கே பாலம் இல்லாததால் மரணம் அடைந்தவரின் சடலத்தை 3 கி.மீ. தூரம் கிராம மக்கள் தோளில் சுமந்து சென்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அரிகியம் மலை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்துமாரி (55). கடந்த வாரம் உடல்நிலை சரியின்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் சித்துமாரி சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து சித்துமாரியின் உறவினர்கள் இலவச அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றனர். அப்போது கடம்பூர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனம் அதற்கு மேலும் செல்லமுடியாத நிலையில் ஓட்டுநர் சடலத்தை குரும்பூர் பள்ளத்தின் அருகிலேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து, அங்குவந்த அரிகியம் மலைக்கிராம மக்கள் உயிரிழந்த முதியவர் சித்துமாரியின் உடலை சுமந்தபடி காட்டாற்றை கடந்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்து அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக 3 கிமீ தூரம் சடலத்தை சுமந்து சென்று அரிகியம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.

உயர் மட்ட பாலம் இல்லாத சூழ்நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் உயிரை பணயம் வைத்து சடலத்தை கிராம மக்கள் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வனப்பகுதியில் உள்ள குரும்பூர் பள்ளம், சக்கரைப்பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளின் குறுக்கே ரூ.7 கோடி செலவில் உயர் மட்ட பாலம் கட்ட டெண்டர் விடப்பட்ட நிலையில் விரைவில் பாலம் கட்டுமான பணியை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadampur , Villagers carrying corpses in Kadampur hills due to wild floods: Demand construction of high-level bridge soon
× RELATED தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில்...