×

‘தேர்தலில் தோற்றாலும் ஆட்சி அமைக்கிறது’ ஜனநாயக படுகொலை செய்யும் பாஜ: சீதாராம் யெச்சூரி தாக்கு

புதுச்சேரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுவை மாநில உரிமை மீட்கவும், மக்கள் நலன் காக்கவும் என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. அக்கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார். இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு மாநாட்டு பிரகடன தீர்மானத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் நடைபெறும் ஆட்சி இரட்டை இன்ஜின் மாட்டப்பட்ட ரயில் போன்றது. இது நகரவே நகராது. எந்த வளர்ச்சியும் இருக்காது.

ஒன்றிய பாஜ அரசு மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கிறது. அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும். பாஜக இல்லாத பிற மாநிலங்களில் ஆட்சியை குலைக்கவே கவர்னர் பதவிகளை பயன்படுத்துகிறார்கள். அங்கெல்லாம் கவர்னர்களின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு ஜனநாயகத்திற்கு புதிய கோட்பாட்டை உருவாக்கி வருகிறது. தேர்தலில் பாஜக தோற்றாலும், ஆட்சியை அமைத்து விடுகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டியும், பண பேரத்தாலும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள். இதன்மூலம் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Sitaram Yechury ,BJP , Sitaram Yechury Attacks BJP Killing Democracy 'Even Losing Elections Forms Government'
× RELATED வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி