ஈரோடு : ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்தி நகரில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவன் மீது வேன் கவிழ்ந்ததில் அவர் உயிரிழந்தார். மேலும், வேனில் சுற்றுலா சென்று திருப்பிய 7 கல்லூரி மாணவர்களும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கோபிச்செட்டி பாளையம் அடுத்துள்ள காந்திநகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி முருகேசன் என்பவர் மகன் கவினேஷ். இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல காந்திநகர் பேருந்து நிலையத்தில் கவினேஷ் பேருந்துக்காக காத்திருந்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வேன் ஈரோடு மாவட்டத்தில் காந்திநகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சுற்றுலா வேன் முன்பு வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின் வந்த வேன் ஓட்டுநர் சதிஷ் இருசக்கர வாகனம் மீது வேன் மோதாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். அப்போது பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த கவினேஷ் மீது கவிழ்ந்தது. இதில் வேனிற்கு அடியில் மாட்டிக்கொண்ட கவினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கவினேஷ் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.