தா.பழூர் : தா.பழூர் அருகே 5 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா வயல்களில் பயிர் வளர்ச்சியை தடுக்கும் களை செடிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கண்ணி, குறிச்சி, தென்கச்சி பெருமாள் நத்தம், கீழக்குடிகாடு, அண்ணங்காரன் பேட்டை, காரைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி சுமார் 5 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொன்னாற்று வாய்க்கால் பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்கப்பெற்று விவசாயிகள் நாற்றங்கால் , நேரடி நெல் விதைப்பு, மற்றும் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்துள்ளனர். தற்பொழுது நெல் நடவில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள வயலில் நெல் முளைப்புத் திறன் மற்றும் வளர்ச்சிக்காக விவசாயிகள் உரம் உள்ளிட்டவைகளை தெளித்து வந்தனர். இதனால் நெல் மற்றும் புல் பூண்டு உள்ளிட்ட களைகளும் சேர்ந்து வளர தொடங்கியது. இதனால் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பா சாகுபடி நடவு செய்த 15 நாட்களிலிருந்து 25 நாட்களுக்குள் முதல் களை எடுத்து உரம் தெளிக்க வேண்டும்.
மேலும் களை அதிக அளவில் இருந்தால் நடவு செய்த பதினைந்து நாட்களில் களை எடுத்து உரம் தெளிக்க வேண்டும். பயிர் நன்றாக விளைச்சல் தர களை எடுத்தல் அவசியம். அதைப் போல40 நாட்களுக்கு பிறகு இரண்டாவது களை எடுத்து உரம் தெளிக்க வேண்டும். தற்பொழுது தொடர்ந்து மழைபெய்து வருவதாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும் நெல் வயல்களில் பூச்சி தாக்கம் ஏற்ப்படும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.