நீடாமங்கலம் : டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையை முன்கூட்டியே குறுவை சாகுபடிக்கு திறந்ததால் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 34.808 ஏக்கரில் குறுவை சாகுபடி முடிந்து தாளடி நடவில் இயற்கை வேளாண்மை முறையில் மீன் அமிலம் மருந்து அடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்டமான நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் ஆண்டுதோறும் மூன்று போகம் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூரில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறந்த தண்ணீரால் டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், திருவாரூர், திருத்துறைபூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, மன்னார்குடி உள்ளிட்ட 10 வேளாண் கோட்டங்களிலும் குறுவை சாகுபடியை தொடங்கினர். முன் கூட்டியே திறந்த தண்ணீரை பயன்படுத்தி மின் மோட்டார் மூலம் விவசாய சாகுபடி பணி செய்தவர்களும் இந்த ஆண்டு குறுவை விவசாய பணியை தொடங்கினர்.
இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 34,802 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தொடங்கியது. நன்றாக கதிர் விளைந்த நிலையில் இயந்திரம் மூலம் குறுவை அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. சில இடங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள் சம்பா பருவத்தில் ஒரு போகம் மட்டும் சம்பா சாகுபடியை சுமார் 8,448 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி பணிக்கு நாற்றங்கால் தயார் செய்து நாற்றுவிட்டு தற்போது சம்பா மற்றும் தாளடி நடவு பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த கோடை பருவத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி பணி நடந்து அறுவடை முடிந்த பிறகே குறுவை சாகுபடி பணி தொடங்கியது.
இதன் அறுவடை முடிந்த உடன் தாளடி நடவு பணி நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே சாகுபடி செய்து தாளடி பயிர்களில் மப்பும் மந்தாரமும் இருந்து வரும் நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தாளடி நெல் பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த மற்றும் பயிர் ஊக்கிக்கான இயற்கை வேளாண் வயல் மேலபூவனூர் பகுதியான மாஸ்டர் பிட் வயலில் ரசாயன உரம் யூரியாவிற்கு பதில் மீன்அமிலம் மருந்து பவர் ஸ்பிரேயரில் அடிக்கும் பணி நடை பெற்று வருகிறது.