×

போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்க நாட்டு பெண் சிக்கினார்

அண்ணாநகர்: அண்ணாநகர் பகுதியில் விலை உயர்ந்த போதைப்பொருள் விற்பனை செய்த தான்சானியா நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக அண்ணாநகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண்ணை மடக்கி,  பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பின்னர், அவரை சோதனை செய்தபோது 10 கிராம் கோகைனை தனது கைப்பையில் மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணை அண்ணாநகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அதில் அந்த இளம்பெண் கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவை சேர்ந்த பிர்ஸ்க்கா அம்சா (28) என்பதும், பெங்களூருவில் இருந்து ரயில் மூலமாக கோகைன் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து விலை உயர்ந்த 10 கிராம் கோகைனை பறிமுதல் செய்தனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இவருக்கு கோகைனை சப்ளை செய்தவர்கள் யார், இவர், யார்யாருக்கெல்லாம் அதை  விற்பனை செய்தார்,  என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Drug addict, African woman, trapped
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...