×

கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் 3 கிமீ தூரம் சடலத்தை தோளில் சுமந்த கிராம மக்கள்

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் பாலம் வசதியின்றி காட்டாற்று வெள்ளத்தில் சடலத்தை தோளில் சுமந்து 3 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் கடந்து செல்லும் அவலம் அரங்கேறியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அரிகியம் மலை கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்துமாரி (55). உடல்நிலை சரியின்றி கோவை அரசு மருத்துமனையில் கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து சித்துமாரியின் உறவினர்கள் இலவச அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றனர். அப்போது கடம்பூர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன்ம் அதற்கு மேலும் செல்லமுடியாத நிலையில் டிரைவர் சடலத்தை குரும்பூர் பள்ளத்தின் அருகிலேயே இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதையடுத்து, அங்குவந்த அரிகியம்  மலைக்கிராம மக்கள் சித்துமாரியின் உடலை தோளில்   சுமந்தபடி காட்டாற்றை கடந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக 3 கிமீ தூரம் சுமந்து சென்று அரிகியம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். உயர் மட்ட பாலம் இல்லாததால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் உயிரை பணயம் வைத்து சடலத்தை கிராம மக்கள் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

குரும்பூர் பள்ளம், சக்கரைப்பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளின் குறுக்கே ரூ.7 கோடி செலவில் உயர் மட்ட பாலம் கட்ட டெண்டர் விடப்பட்ட நிலையில் விரைவில் பாலம் கட்டுமான பணியை தொடங்க அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadampur , Kadampur hills, wild floods, villagers carrying corpses on their shoulders
× RELATED தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில்...