×

கனமழையை எதிர்கொள்ள 1,270 மீட்பு படையினர் தயார்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: கனமழையை எதிர்க்கொள்ளும் வகையில் 1,270 பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை-முன்னெச்சரிக்கை மற்றும் பாதிப்புகள் குறித்த கண்காணிப்பு பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று சென்னையில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நேற்று(நேற்று முன்தினம்) பெய்த கனமழையால் 83 கால்நடை இறந்துள்ளன. 538 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நிவாரண மையங்களில் 16,807 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 70 வீரர்களை கொண்ட 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில், சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனை விரைவில் வடிய வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் மழை நீர் விரைந்து வடிந்து வருகிறது. கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க அனைத்துத் துறை அலுவலர்களும் கள அளவில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், மின் விநியோகத்தை உடனடியாக சீரமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஒரு தலைமைப் பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர்கள், 4 செயற் பொறியாளர்கள் மற்றும் 150 பணியாளர்கள் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், ஓதவந்தான்குடி கிராமம் வழியாக செல்லும் புதுமண்ணியாற்றின் வலது கரையில் ஏற்பட்ட உடைப்பு உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 655 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 473 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 182 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Ramachandran , Heavy rain, 1,270 rescuers ready, Minister Ramachandran informs
× RELATED ஜனவரியில் மட்டும் 1.37 லட்சம் வெளிநாட்டு...