சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019ம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தியபோது, சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
அண்மையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக அரசு மருத்துவர்கள் மேற்கொண்டதாகவும், வரும் 30ம் தேதி மவுனப் போராட்டம் நடத்த உத்தேசித்து இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டக் குழு நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.