திருமலை: ஆந்திராவில் ஓட்டலாக மாற்றியமைக்க லாரியில் கொண்டு வரப்பட்ட பழைய விமானம் பாலத்தின் அடியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானத்தை ஓட்டலாக மாற்றி வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்தனர். இதற்காக, கொச்சியில் பழைய விமானம் ஒன்றை வாங்கி கொண்டு லாரியில் ஐதராபாத் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி பழைய விமானத்துடன் லாரி நேற்று முன்தினம் புறப்பட்டு வந்தது. அப்போது, ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கியது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேம்பாலத்தில் இருந்து விமானம் சேதமடையாமல் கவனமாக வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.